உள்ளூர் செய்திகள்

கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2023-06-03 10:09 GMT   |   Update On 2023-06-03 10:09 GMT
  • கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
  • ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் பிரதீப் (வயது 23). இவர் தனது வீட்டில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டின் முன்பு வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது குறித்து தஞ்சை கிழக்குப்போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (26), கீழ அலங்கம் சிவக்குமார் (25), வடக்குவாசல் சூர்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட 3 பேரும் கொலை நடந்த அன்று கரந்தை பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடன்கேட்டு ஊழியர்களை மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி ரகளையில் ஈடுபட்டதோடு, ஆயுதங்களை காட்டி தாக்கவும் முயற்சி செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் விக்னேஷ், சிவக்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவப்படி, தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கான உத்தரவை, திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News