உள்ளூர் செய்திகள் (District)

விபத்தில் காயமடைந்தவர்கள்


ஈரோட்டில் இன்று காலை விபத்து- மேம்பால தூணில் அரசு பஸ் மோதி 15 பயணிகள் காயம்

Published On 2022-06-25 05:51 GMT   |   Update On 2022-06-25 05:51 GMT
  • விபத்து நடந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர்.
  • காயமடைந்த மற்ற பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை 8.45 மணியளவில் ஊட்டியை நோக்கி அரசு பஸ் கிளம்பியது. பஸ்சை மேட்டுப்பாளையம் அன்னூரை சேர்ந்த சக்திவேல் (54) என்பவர் ஓட்டினார். வெள்ளியங்கிரி என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

பஸ் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானாவை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பஸ் நிறுத்தத்தில் தனியார் பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை முந்தி செல்வதற்காக அரசு பஸ் டிரைவர் சக்திவேல் முயன்றபோது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மேம்பால தூணில் பயங்கரமாக மோதியது.

இதில் டிரைவர் சக்திவேலுக்கு கால், தலையில் பலத்த அடிபட்டது. கண்டக்டர் வெள்ளியங்கிரிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் பயணம் செய்த திருச்சி துறையூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் (55) பலத்த அடிபட்டு உயிருக்கு போராடினார்.

விபத்து நடந்ததும் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல் போட்டனர். தகவல் அறிந்ததும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய துரைராஜை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதேப்போல் காயமடைந்த மற்ற பயணிகளையும் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News