உள்ளூர் செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தில் பனி படர்ந்துள்ளது.

தஞ்சையில், கடும் பனிப்பொழிவு

Published On 2023-02-12 09:46 GMT   |   Update On 2023-02-12 09:46 GMT
  • இரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடிக்கிறது.
  • வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர்.

தஞ்சாவூர்:

தமிழ்நாட்டில் கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்கள் வரை கடும் குளிர் இருக்கும்.

தஞ்சை மாவட்டத்தில் கார்த்திகை மாதம் தொடக்கத்தில் இருந்தே கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இடையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து ஓய்ந்தாலும் பனியின் தாக்கம் குறையவில்லை.

இந்த மாத தொடக்கத்தில் நான்கு நாட்கள் பருவம் தவறி மழை பெய்தது. தற்போது மழை ஓய்ந்து பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது.இருப்பினும் இரவில் தொடங்கும் பனிப்பொழிவு காலை 8 மணி வரை நீடிக்கிறது.

அதன் பிறகு வெயில் சுட்டெரிக்க தொடங்குகிறது. தஞ்சையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. வயல்வெளிகள் காலை 7 மணி வரை தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பனியால் வெண்மேகங்கள் போல் படர்ந்து பாதி அளவே தெரிந்தது. பின்னர் வெயில் அடிக்க தொடங்கிய பிறகு கோபுரம் முழுவதுமாக தெரிந்தது.

இதேபோல் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனியின் பக்கம் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டன.

பஸ்களும் காலை நேரத்தில் விளக்கை எரியவிட்டபடி சென்று வந்தன. அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களும் இந்த பனிபொழிவு காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Tags:    

Similar News