இந்தியா

மின்கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் இந்தியா கூட்டணி நாளை `பந்த்'

Published On 2024-09-17 04:54 GMT   |   Update On 2024-09-17 05:38 GMT
  • தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும்.
  • தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி:

புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ் டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை (புதன்கிழமை) 'பந்த்' போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது.

இதற்காக இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியார் பஸ் உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ மற்றும் கடை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும். இதே போல் கடைகளும் அடைக்கப்படுகிறது.

தற்போது தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டததிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை (புதன்கிழமை) விடுமுறை விடப்பட்டு அன்று நடைபெறும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News