உள்ளூர் செய்திகள் (District)

ராஜா எம்.எல்.ஏ. 

தென்காசி மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கனிமொழி எம்.பி. பங்கேற்பு-ராஜா எம்.எல்.ஏ. அறிக்கை

Published On 2023-06-26 08:42 GMT   |   Update On 2023-06-26 08:45 GMT
  • மாணவர் மன்றத்தில் மாணவர்களுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.
  • இ-சேவை மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார்.

சங்கரன்கோவில்:

தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கனிமொழி எம்.பி.

நாளை (செவ்வாய்க்கிழமை) தென்காசி வடக்கு மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வருகிறார். அவருக்கு தேவர்குளத்தில் காலை 11 மணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து தேவர்குளத்தில் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சியும், பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி மாணவர் மன்றத்தில் மாணவர்க ளுடன் கனிமொழி எம்.பி. கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும்.

நூற்றாண்டு விழா

அதனைத் தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் அறிவித்துள்ள இல்லம் தோறும் கட்சிக்கொடி என்ற அறிவிப்பின்படி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் குருக்கள்பட்டி, சங்கரன்கோவில் தெற்கு ஒன்றியம் மதீனா நகர், சங்கரன்கோவில் நகரம் ஆகிய பகுதிகளில் தி.மு.க. கொடி ஏற்றும் நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள இ-சேவை மையத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைக்கின்றார். தொடர்ந்து, மாலையில் கரிவலம்வந்த நல்லூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி வைத்து நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார்.

எனவே இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News