உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் வருங்கால கணவரை சந்திக்க சென்ற இளம்பெண் மாயம்

Published On 2023-05-16 09:29 GMT   |   Update On 2023-05-16 09:34 GMT
  • சாந்தினிக்கு வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமம் வன்னி மரத்தோட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகள் சாந்தினி (வயது 27). டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

சாந்தினிக்கும், ஆர்.வி.புதூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் வருகிற 24-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் மேற்கொண்டு வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சாந்தினி தனது வருங்கால கணவரை பார்க்க செல்வதாக பெற்றோரிடம் கூறினார். அப்போது அவரது தந்தை நானே கொண்டு சென்று விடுகிறேன் என்றார். ஆனால் அவர் வேண்டாம் நான் தனியாகவே செல்கிறேன் என்று கூறினார். பின்னர் சாந்தினி தனது தம்பியுடன் பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் அவரை அவரது வருங்கால கணவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றார்.

பின்னர் பொள்ளாச்சிக்கு திரும்பிய சாந்தினி திடீரென மாயமாகி விட்டார். அவரை அவரது தம்பி பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து சாந்தினியின் தந்தை வடக்கிப்பாளையம் போலீசில் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் நடக்க இருந்த நிலையில் மாயமான இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News