செங்கோட்டையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி-டிராக்டரில் குடிநீர் விநியோகம் செய்த கவுன்சிலர்கள்
- செங்கோட்டை நகராட்சிக்கு நாள்தோறும் 19 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது.
- வறட்சியை காரணம் காட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகப்படுகிறது.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர், குண்டாறு அணை, தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வினியோகிக்கபடுகிறது.
நீர்வரத்து குறைந்தது
இந்நிலையில் பருவ மாற்றத்தால் குண்டாறு அணையில் நீர்வரத்து குறைந்துள்ளதால் செங்கோட்டை நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நாள்தோறும் 19 லட்சம் லிட்டர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதன் அளவு குறைக்கப்பட்டு சுமார் 10 லட்சம் லிட்டர் நீர் தான் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த கோடை காலம் முதல் தற்போது வரை வறட்சியை காரணம் காட்டி 10 நாட்களுக்கு ஒரு முறை நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகப்படுகிறது. இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் தற்போது வழங்கப்படும் குடிநீரானது முறையான நேரத்திற்கு வராததால் கடும் அவதி அடைவதாகவும் கூறினர்.
தண்ணீர் விநியோகம்
இந்த குடிநீர் தட்டுபாட்டை கருத்தில் கொண்டு சம்பந்தபட்ட அதிகாரிகள் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தினமும் 19 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்த தகவல்களை முறையாக தெரிவிக்க வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது செங்கோட்டை 3, 4-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சுடரொளி ராமதாஸ், சரஸ்வதி ஆகியோர் தனது சொந்த செலவில் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு டிராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்தனர். அவர்களது செயலை அப்பகுதி பொது மக்கள் பாராட்டினர்.