உள்ளூர் செய்திகள்

விக்கிரவாண்டியில் இன்று மாலை சீமான் பிரசாரம்

Published On 2024-06-25 04:26 GMT   |   Update On 2024-06-25 04:26 GMT
  • வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது.
  • வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும்.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ந் தேதி இறந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதியை இந்திய தேர்தல் ஆணையம் காலியாக அறிவித்தது. பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. சார்பில் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர். அபிநயா ஆகியோர் உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் 29 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு நாளை கடைசி நாளாகும். இதனை தொடர்ந்து தி.மு.க.வும், பா.ம.க.வும் விக்கிரவாண்டி தொகுதி மக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர். அபிநயாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விக்கிரவாண்டியில், தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று மாலை மேற்கொள்ளகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் தான் போட்டி என சீமான் கூறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News