உள்ளூர் செய்திகள் (District)

கடலோர காவல் படை போலீசார்


கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை- தூத்துக்குடியில் ஊடுருவ முயன்ற 10 பேர் சிக்கினர்

Published On 2022-06-28 08:06 GMT   |   Update On 2022-06-28 08:06 GMT
  • தமிழக கடலோர பகுதிகளில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது.

தூத்துக்குடி:

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு நாடு முழுவதும் கடலோர பகுதிகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இன்று தமிழக கடலோர பகுதிகளில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்திலும் இந்த ஒத்திகை நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை போலீசார், மத்திய, மாநில உளவுத்துறையினர், கியூ பிரிவு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு துறையினரும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சுமார் 1,000 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மரைன் டி.எஸ்.பி. தலைமையில் கடலோர போலீசார் 2 குழுக்களாக பிரிந்து படகுகள் மூலம் கடலோர பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.

வழக்கமாக இந்த ஒத்திகையையொட்டி கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த வீரர்கள் கடல் வழியாக பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருவுவார்கள். அவர்களை உள்ளூர் போலீசார் மடக்கி பிடிக்க வேண்டும் என்பது தான் இந்த ஒத்திகையின் முக்கிய உத்தரவு ஆகும்.

அதன்படி தூத்துக்குடி கடற்கரை பகுதி வழியாக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 10 பேர் நகருக்குள் ஊடுருவ முயன்றனர்.

அவர்களை கடலோர பாதுகாப்பு படை டி.எஸ்.பி. பிரதாபன், இன்ஸ்பெக்டர் ரேனிஸ் மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை மாலை வரை நடைபெறுகிறது.

Tags:    

Similar News