அம்பை அருகே தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை
- முப்புடாதி மற்றும் சிலர் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
- 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முப்புடாதியை சரமாரி வெட்டிக்கொன்றது.
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த பிரம்மதேசம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகநயினார். இவரது மகன் முப்புடாதி(வயது 32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். மேலும் விவசாயமும் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது.
நேற்று இரவு அம்பையை அடுத்த வாகைகுளம் மூப்பனார் தெருவுக்கு சற்று தொலைவில் முப்புடாதி மற்றும் சிலர் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில் அதே பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே முப்புடாதி நள்ளிரவு நேரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் முப்புடாதியை சரமாரி வெட்டிக்கொன்றது. பின்னர் அவரது தலையை துண்டித்து அருகில் இருக்கும் வாறுகாலில் வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த முப்புடாதி உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சமீபத்தில் முப்புடாதி மனைவியை அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் அவதூறாக பேசியதாகவும், அதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் முப்புடாதி ஒருவரை வெட்டியதாக கூறப்படுகிறது. அந்த முன்விரோதத்தில் அரிவாள் வெட்டுபட்டவர் இந்த கொலையை செய்திருக்கலாமா? அல்லது நேற்று நடைபெற்ற தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனிப்படை அமைத்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.