உள்ளூர் செய்திகள் (District)

ஆண்டிபட்டி அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவர் வெட்டிக்கொலை- நாடகமாடிய மனைவி கைது

Published On 2023-05-01 06:00 GMT   |   Update On 2023-05-01 06:00 GMT
  • குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா மனைவி ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
  • ஜெயா அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டினார்.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மாகாளிபாறையைச் சேர்ந்தவர் ராஜா (வயது 44). விவசாயி. இவரது மனைவி ஜெயா (35). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் தங்கி இருந்து 8 மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

தற்போது விடுமுறை என்பதால் இவர்களும் வீட்டில் இருந்தனர். ராஜா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்ததுடன் அவரை அடித்து மிரட்டி வந்துள்ளார். நேற்று இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ராஜா மனைவி ஜெயாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயா அரிவாளால் தனது கணவரை சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த அவர் மயங்கி விழுந்தார். அப்போது பதறிப்போன ஜெயா அருகில் இருந்த தனது உறவினரான ஆட்டோ டிரைவர் தருண்கோபியை வரவழைத்து ராஜாவை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் வழியிலேயே அவர் இறந்து விடவே மீண்டும் வீட்டுக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து விடவே ராஜா குடிபோதையில் தன்னை வெட்ட வந்ததாகவும், தான் தடுத்ததால் தனக்குத்தானே அரிவாளால் வெட்டிக் கொண்டதாகவும் கூறினார்.

ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் ஏற்பட்டதால் ராஜாவின் தாய் அன்னத்தாய் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரிடமும் அதே போல் தெரிவித்த நிலையில் அதன் பின்னர் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தான் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார். இதனையடுத்து கடமலைக்குண்டு போலீசார் அவரை கைது செய்தனர்.

கொலையும் செய்வாள் பத்தினி என்பதற்கு ஏற்ப கணவரையே மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News