உள்ளூர் செய்திகள் (District)

மயிலம் அருகே கார் மோதி 3 பேர் பலி

Published On 2024-09-29 05:28 GMT   |   Update On 2024-09-29 05:28 GMT
  • 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மயிலம்:

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பேரணி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (32), இவரது நண்பர் பூபாலன் (49). இவர்கள் இருவரும் திருப்பதி கோவிலுக்கு சென்று விட்டு திண்டிவனத்தில் நிறுத்தி வைத்திருந்த தங்களது மோட்டார் சைக்கிளில் பேரணி கிராமத்திற்கு திண்டிவனம்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணியளவில் விலங்கம்பாடி பெட்ரோல் பங்க் அருகே வரும்போது திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக அதிவேகமாக வந்த காரானது ஏற்கனவே நடந்து சென்ற ஒருவர் மீது மோதி அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த கார் அய்யப்பன், பூபாலன் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்து வந்து 3 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் இறந்த ஒருவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. அவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மோதி 3 பேர் பலியான சம்பவம் மயிலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News