உள்ளூர் செய்திகள் (District)

மூக்கையா தேவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2022-09-04 09:07 GMT   |   Update On 2022-09-04 09:07 GMT
  • மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சென்னை:

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அரசியலிலும், பொதுச்சேவை புரிவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், எம்.பி.யாகவும், எம்.எல்.ஏ.வாகவும் மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றிய வரும், கல்விப் பணிகளில் அதிக நாட்டம் கொண்டவருமான, போற்றுதலுக்குரிய பி.கே.மூக்கையா தேவரின் 43-வது நினைவு நாளான வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.45 மணியளவில், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் அமைந்திருக்கும் மூக்கையா தேவர் நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.பி. ஜக்கையன், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான் என்ற செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மூக்கையா தேவருக்கு வீர அஞ்சலி செலுத்தும் இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News