குன்றத்தூர் அருகே நிறுத்தப்பட்ட காருக்குள் வட மாநில வாலிபர் மர்ம மரணம்
- இறந்து போன வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- அஜய்குமார் சிங்கின் மர்ம மரணம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூந்தமல்லி:
குன்றத்தூர், நத்தம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் அருகே காரை நிறுத்தி இருந்தார்.
நேற்று இரவு நிறுத்தப்பட்ட காரில் இருந்து திடீரென விளக்குகள் எரிந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் காரின் மீது போடப்பட்டு இருந்த கவரை நீக்கி பார்த்த போது காருக்குள் டிரைவர் இருக்கையில் வாலிபர் ஒருவர் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து போன வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்து போன வாலிபர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஜய்குமார் சிங்(வயது 20) என்பது தெரிந்தது. அவர் தனது அக்காளின் குடும்பத்துடன் கடந்த 8 மாதமாக திருமுடி வாக்கத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால் கடந்த வாரம் வேலையில் இருந்து நிர்வாகத்தினர் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. பின்னர் அதே பகுதியில் வேறு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். அங்கும் அஜய்குமார் சிங்கின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததால் நேற்று காலை 9 மணியளவில் வேலையில் இருந்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர். இதன் பின்னர் அவர் நிறுத்தப்பட்டு இருந்த காரில் மர்மமாக இறந்து உள்ளார்.
பூட்டப்பட்ட காருக்குள் அஜய்குமார் சிங் எதற்காக வந்தார். டிரைவர் இருக்கையில் இருந்த போது அவர் சீட்பெல்ட்டும் போட்டு உள்ளார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அஜய்குமார் சிங்கின் மர்ம மரணம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.