அசோக் நகரில் சொகுசு கார் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது- 2 பேர் படுகாயம்
- வடபழனி நோக்கி 100 அடி சாலையில் நேற்று நள்ளிரவு 1மணி அளவில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
- மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிஷோர் குமாரின் கால் முறிந்து படுகாயம் அடைந்தார்.
போரூர்:
சென்னை அசோக் நகரில் இருந்து வடபழனி நோக்கி 100 அடி சாலையில் நேற்று நள்ளிரவு 1மணி அளவில் சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதிவேகமாக சென்ற கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிஷோர் குமாரின் கால் முறிந்து படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து கிஷோர் குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காருக்குள் சிக்கிய வாலிபரையும் காயத்துடன் மீட்டனர். விசாரணையில் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் மேலாளரான பிரபு (37) என்பது தெரியவந்தது. வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நண்பரை பார்ப்பதற்காக குடிபோதையில் காரை ஓட்டி சென்றபோது விபத்து ஏற்பட்டு உள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.