திருவள்ளூரில் மணல் லாரி மோதி முதியவர் பலி
- லாரியின் சக்கரத்தில் சிக்கிய பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர், பூங்கா நகர், கனக்காம்பரம் பூ தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது65). இவரது மகன் கார்த்திகேயன். இவரது மனைவி சுதானா(38). இவர் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இன்று காலை பச்சையப்பன், மருமகள் சுதானாவை மோட்டார்சைக்கிளில் திருவள்ளூர் பஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கொண்டு இருந்தார். உழவர் சந்தை அருகே சென்றபோது பின்னால் வந்த மணல் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். சுதானா படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் டவுன் போலீசார் சுதானாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.