உள்ளூர் செய்திகள் (District)

தொண்டையில் புரோட்டா சிக்கி பெயிண்டர் மரணம்

Published On 2023-02-11 05:31 GMT   |   Update On 2023-02-11 05:31 GMT
  • குமார் புரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென புரோட்டா தொண்டையில் சிக்கி கொண்டது.
  • பூமியான்பேட்டையில் தொண்டையில் புரோட்டா சிக்கி பெயிண்டர் பரிதாபமாக இறந்து போனார்.

புதுச்சேரி:

புதுவை குமரகுரு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணகி. இவருக்கு ஏற்கனவே ஜெகதீசன் என்பவருடன் திருமணமாகி யுவராஜ் என்ற மகன் உள்ளார். ஜெகதீசன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து கண்ணகிக்கு குமார் (வயது42) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர். குமார் மூலம் கண்ணகிக்கு டோனி என்ற 8 வயது மகன் உள்ளான்.

பெயிண்ட் வேலை செய்து வந்த குமார் கடந்த 3 ஆண்டுகளாக சரியாக வேலைக்கு செல்லாமல் கண்ணகியிடம் அடிக்கடி பணம் வாங்கி மது குடித்து வந்தார். அதுபோல் நேற்று மதியம் குமார் தனது மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது பாட்டில் வாங்கி வந்து வீட்டில் மது அருந்தினார். பின்னர் தூங்கி விட்டார்.

மாலையில் குமாரின் நண்பர் ஜெகன் என்பவர் குமார் குடும்பத்துக்கு சாப்பிட புரோட்டா வாங்கி கொடுத்து விட்டு சென்றார். இரவு தூங்கி எழுந்த குமார் தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டார்.

அப்போது குமாரின் நண்பர் வாங்கி கொடுத்த புரோட்டாவை சாப்பிட கொடுத்தார். குமார் புரோட்டாவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது திடீரென புரோட்டா தொண்டையில் சிக்கி கொண்டது.

இதையடுத்து குமார் தொண்டையில் சிக்கிய அந்த புரோட்டாவை கையால் எடுக்க முயன்றார். ஆனால் இயலவில்லை. இதனால் குமார் மயங்கி சரிந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கண்ணகி அதிர்ச்சியடைந்து குமாரின் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே அவரது நண்பர்கள் ஆட்டோ மூலம் குமாரை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News