பொன்னேரியில் அரசு பஸ் இரவில் இயக்கப்படாததால் பயணிகள் திடீர் மறியல்
- அரசு பஸ்சை இயக்க கோரி பொன்னேரி பஸ்நிலையம் அருகே புதிய தேரடி தெரு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்
பொன்னேரி:
பொன்னேரி பணிமனையில் இருந்து மொத்தம் 55 பஸ்கள் திருவள்ளூர், செங்குன்றம், கோயம்பேடு கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு சுண்ணாம்பு குளம், அண்ணாமலைச்சேரி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் நேற்று இரவு பொன்னேரி பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் அண்ணாமலைச்சேரி பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சுக்காக (எண்:90சி) காத்திருந்தனர்.
ஆனால நீண்ட நேரமாக பஸ்கள் வரவில்லை. இதனால் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்தனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது சரிவர பதில் கூறவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் குறித்த நேரத்தில் அரசு பஸ்சை இயக்க கோரி பொன்னேரி பஸ்நிலையம் அருகே புதிய தேரடி தெரு சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் பொன்னேரி போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பஸ்டிரைவர் ஒருவர் கூறும்போது, 'பொன்னேரி பஸ்பணி மனையில் மொத்தம் 55 பஸ்கள் உள்ளன. இதனை இயக்குவதற்கு 110 டிரைவர்கள் தேவை. ஆனால் 90 டிரைவர்கள் மட்டுமே உள்ளனர்.
இதனால் அதிகமாக வேலை பளு உள்ளது. பல வழித்தடங்களுக்கு செல்ல வேண்டிய பஸ்கள் நிறுத்தப்பட்டு உள்ளன' என்றார்.