உள்ளூர் செய்திகள் (District)

போரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 70 பவுன் நகை-ரூ.3½ லட்சத்தை சுருட்டிய கொள்ளையன் கைது

Published On 2023-05-02 07:18 GMT   |   Update On 2023-05-02 07:18 GMT
  • மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.
  • போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போரூர்:

போரூர், உதயா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன். மருந்து கம்பெனி ஒன்றில் ஆலோசகராக உள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை சுருட்டி தப்பி சென்றுவிட்டான்.

இதுகுறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளை நடந்த வீட்டில் கிடைத்த கைரேகை பதிவை ஆய்வு செய்தபோது கைவரிசை காட்டி தப்பியது பிரபல கொள்ளையனான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (26) என்பது தெரிந்தது. அவனை ஒரே நாளில் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சூர்யா மீது ஏற்கனவே மாங்காடு, போரூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான். இந்த நிலையில் அவன் மீண்டும் கைவரிசை காட்டியபோது கைரேகை பதிவால் ஒரே நாளில் சிக்கிக்கொண்டான். கொள்ளையன் சூர்யாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News