உள்ளூர் செய்திகள் (District)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள விரலிமஞ்சள் பறிமுதல்

Published On 2024-10-15 06:52 GMT   |   Update On 2024-10-15 06:52 GMT
  • இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கருவாடு கூடத்தில் சோதனை நடத்தினர்.
  • விரலிமஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா மட்டுமின்றி பீடி இலை, பயோ டீசல், விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்களும் சட்டவிரோதமாக கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தாளமுத்துநகர் கோமாஸ்புரம் சுனாமி காலனியில் ஒரு கருவாடு கூடத்தில் ஏராளமான விரலிமஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கருவாடு கூடத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தலா 40 கிலோ எடை கொண்ட 60 மூட்டைகளில் விரலிமஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இவற்றை தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து விரலிமஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த விரலிமஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்றவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News