உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே தோட்டத்தில் பெண் கொடூரக்கொலை

Published On 2023-05-15 05:23 GMT   |   Update On 2023-05-15 05:23 GMT
  • ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அந்த பெண் உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.
  • பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்கு அழகுநாச்சியார்புரம் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அந்த தோட்டத்தில் வேலைக்கு செல்வதற்காக இன்று காலை சிலர் சென்றுள்ளனர்.

அப்போது அங்கு செல்லும் வழியில் பெண் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு மட்டும் இருந்தது. அவரது கழுத்தில் வெட்டுக்காயங்கள் பலமாக இருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், குருவிகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும் அந்த பெண் உடலை சுற்றிலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

தகவல் அறிந்து சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதீர் அங்கு சென்று பார்வையிட்டார்.

பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? அவரை யார் கொலை செய்தது? எதற்காக கொல்லப்பட்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News