உள்ளூர் செய்திகள் (District)

நாளை தனித்தனியாக ஆலோசனை: மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை போட்டி போட்டு அழைக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்

Published On 2022-06-17 07:40 GMT   |   Update On 2022-06-17 07:40 GMT
  • ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அ.தி.மு.க.வில் நீடித்து வரும் ஒற்றை தலைமை சர்ச்சை அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. கடந்த 4 நாட்களாக இந்த விவகாரம் கட்சிக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

ஒற்றை தலைமை விவகாரத்தை குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமியோ, அவரது ஆதரவாளர்களோ எந்த விதமான கருத்துக்களையும் கூறாமலேயே உள்ளனர்.

சென்னையில் கடந்த 14-ந்தேதி நடைபெற்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர்தான் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதுபற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் எடப்பாடி பழனிசாமி நேற்று காலையில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

அங்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்ற அவர் இன்று ஆரணியில் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்று இரவு எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புகிறார். நாளை அவர் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தொடர்பாகவும், வருகிற 23-ந்தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் எப்படி செயல்படுவது என்பது பற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தனது நிலைப்பாட்டை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மாவட்ட செயலாளர்களை தங்கள் பக்கம் தக்க வைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நாளை ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி நாளை சென்னையில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் தனியாக ஆலோசனை நடத்த முடிவு செய்திருப்பது அ.தி.மு.க.வில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக தீர்மான குழுவினர் இன்று ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் செம்மலை, ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், வைகை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க.வில் மோதல் முற்றியுள்ளது. இதனால் அந்த கட்சி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் போட்டி போட்டு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தனித்தனி அழைப்பை பல மாவட்ட செயலாளர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இருவரும் (எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்) இணைந்து அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், அதுவே கட்சியின் நலனுக்கு உகந்தது என்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் தெரிவித்துள்ளதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே சமாதான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தம்பிதுரை நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

இந்த நிலையில் இன்று தம்பிதுரை சென்னையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஒற்றை தலைமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.

ஒற்றை தலைமை விவகாரம் தீராத நிலையில் அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் அடுத்தடுத்த நிகழ்வுகள் அந்த கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வம் இன்று 4-வது நாளாக ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். கடந்த 14-ந்தேதி ஒற்றை தலைமை விவகாரம் பிரச்சினையாக எழுந்த போதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று ஓ.பி.எஸ். நடத்திய கூட்டத்தில் வைத்திலிங்கம், மைத்ரேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.வில் நீடித்து வரும் ஒற்றை தலைமை சர்ச்சை அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News