உள்ளூர் செய்திகள் (District)

மர்மமான முறையில் இறந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் மாமன் கைது

Published On 2024-09-25 08:05 GMT   |   Update On 2024-09-25 08:05 GMT
  • வழக்கில் ஸ்ரீமதியின் தாய் மாமன் செந்தில் முருகனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகவில்லை.
  • அவரை கள்ளக்குறிச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

சின்னசேலம்:

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந்தே தி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி ஸ்ரீராம் விடுமுறையில் இருந்ததால் இந்த வழக்கு விசாரணை அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஸ்ரீமதியின் தாய் மாமன் செந்தில் முருகனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகவில்லை. இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி சென்னையில் தங்கியிருந்த மாணவி ஸ்ரீமதியின் தாய்மாமன் செந்தில் முருகனை போலீசார் கைது செய்தனர். அவரை கள்ளக்குறிச்சி அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News