உலக புலிகள் தினம்- குன்னூரில் புலி வேடம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்
- மசினகுடி பெட்ரோல் பங்க் முதல் வனச்சோதனை சாவடி வரை நடைபெற்றது.
- தமிழ் நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற நடமான புலியாட்டம் ஆடப்பட்டது.
குன்னூர்:
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் புலிகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் டி.வெங்கடேஷ், துணை இயக்குனர் அருண்குமார் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
பேரணியானது மசினகுடி பெட்ரோல் பங்க் முதல் வனச்சோதனை சாவடி வரை நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், வனப்பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காடுகள் மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து ஓவியம், கட்டுரை, பேச்சு பேட்டிகளும் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்றவர்களுக்கு தெப்பக்காடு யானைகள் பயிற்சி முகாம் மையத்தில் நடந்த விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் குன்னூர் பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி தேசிய மாணவர் படை சார்பில் வண்டிச்சோலை, சிம்ஸ்பூங்கா, டெ்போர்ட், குன்னூர் மார்க்கெட், குன்னூர் ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகள் விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சி நடத்தினர்.
இதை தொடர்ந்து தமிழ் நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புற நடமான புலியாட்டம் ஆடப்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள் புலி வேடமிட்டு நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அழிவு நிலையில் உள்ள புலிகளை காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி நாடகமும் நடித்து காட்டப்பட்டது.
நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அதிகாரி சிந்தியா ஜார்ஜ், சர்வதேச புலிகள் தினத்தின் தலைமை கூற்றாகிய புலிகள் பாதுகாப்பு மனிதர் கையில் எனும் கருத்தை கொண்டு இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்.