கன்னியாகுமரியில் கழிவறையில் பிணமாக கிடந்த என்ஜினீயரிங் மாணவர் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
- பரிசோதித்த டாக்டர்கள் அஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டலை சேர்ந்தவர் தம்பிராஜா. இவரது மகன் அஜித் (வயது 20). இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
அஜித், நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டின் வெளியில் உள்ள கழிவறைக்கு சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்குள் திரும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கழிவறைக்கு சென்று பார்த்தனர்.
அங்கு அஜித் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே மகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அஜித் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.