உள்ளூர் செய்திகள் (District)

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரசு பஸ்-கார் மோதி 5 பேர் படுகாயம்

Published On 2023-05-17 06:25 GMT   |   Update On 2023-05-17 06:25 GMT
  • படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • ஒருவர் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம்:

தஞ்சாவூரை சேர்ந்தவர் தியாகராஜன்(வயது44). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 12 பேருடன் காரில் தஞ்சாவூருக்கு புறப்பட்டார். காரை தஞ்சையை சேர்ந்த அருண் என்பவர் ஓட்டினார். நேற்று தியாகராஜன் மற்றும் குடும்பத்தினர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்து விட்டு மாலையில் ஊருக்கு புறப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு கார் ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி அருகில் உள்ள பழங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது.

அப்போது நாகப்பட்டினத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக கார் மீது பயங்கரமாக மோதியது.இதில் கார் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்தப்பகுதியினர் விரைந்து வந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை போராடி மீட்டனர்.

இந்த விபத்தில் காரில் பயணித்த தில்லைநாயகி (வயது58), அருண்குமார்(32), ஜெசிந்தன்(11), ஹாரூன்(7), ஹேமவர்த்தன்(6) ஆகியோர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக திருப்பாலைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த ரவிசங்கர் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News