தூத்துக்குடியில் தலையில் கல்லை போட்டு தொழிலாளி கொலை
- மாரியப்பன் நள்ளிரவில் அங்கு தூங்கி கொண்டிருந்த சப்பாணி முத்துவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.
- மாரியப்பனை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சப்பாணிமுத்து (வயது 42). சலவைத் தொழிலாளி. தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் (43). நண்பர்களான இவர்கள் இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள சலவை தொழிலாளர்கள் கூடத்தில் படுத்து உறங்குவது வழக்கம். மேலும் அவர்கள் ஒன்றாக மது குடித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நண்பர்கள் சலவை தொழிலாளர்கள் கூடத்தில் படுத்து உறங்கினர்.
எனினும் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் நள்ளிரவில் அங்கு தூங்கி கொண்டிருந்த சப்பாணி முத்துவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் மாரியப்பன் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் ராஜாராமன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சப்பாணி முத்துவின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து மாரியப்பனை கைது செய்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கூறும்போது, மது போதையில் எனது தாய் குறித்து சப்பாணி முத்து அவதூறாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.