உள்ளூர் செய்திகள்

மேலூர் அருகே விவசாயி கொலை: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வாலிபருடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி

Published On 2022-09-09 08:59 GMT   |   Update On 2022-09-09 08:59 GMT
  • கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் ரவியை தீர்த்துக்கட்ட பாண்டியம்மாள் முடிவு செய்தார்.
  • ஊருக்கு ரவி வந்திருப்பதை அறிந்து பாண்டியம்மாள், கள்ளக்காதலன் குமார், அவரது நண்பர் கூத்தப்பன்பட்டியை சேர்ந்த பிச்சைக்கனி ஆகிய 3 பேர் சம்பவத்தன்று இரவு ரவி வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்துள்ளனர்.

மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 52), விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள் (45) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருப்பூரில் உள்ள ஒரு தோட்டத்தில் ரவி வேலை பார்த்து வந்தார்.

மேலூரில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பாண்டியம்மாள் அங்கு பூ வியாபாரம் செய்து வந்தார். அப்போது பாண்டியம்மாளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதை அறிந்த ரவி மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் பாண்டியம்மாள் கள்ளக்காதலை தொடர்ந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ஊர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ரவி சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அருக்கம்பட்டியில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள அவரது வீட்டில் சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த போது மண்வெட்டியால் கொடூரமாக தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரவியின் மனைவி பாண்டியம்மாள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட பாண்டியம்மாள் முடிவு செய்தார். அதன்படி ஊருக்கு அவர் வந்திருப்பதை அறிந்து பாண்டியம்மாள், கள்ளக்காதலன் குமார், அவரது நண்பர் கூத்தப்பன்பட்டியை சேர்ந்த பிச்சைக்கனி ஆகிய 3 பேர் சம்பவத்தன்று இரவு ரவி வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் பாண்டியம்மாளை கைது செய்தனர். கள்ளக்காதலன், அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News