உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வாலிபர் குத்திக்கொலை- மற்றொரு காதலனுடன் பெண் துப்புரவு ஊழியர் கைது

Published On 2022-09-24 09:13 GMT   |   Update On 2022-09-24 09:16 GMT
  • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விஜய்யை, காதலி சவுந்தர்யா தனது மற்றொரு கள்ளக்காதலன் பிரபுவுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.
  • இதையடுத்து சவுந்தர்யா, பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

போரூர்:

சென்னை, சாலிகிராமம், சாரதாம்பாள் தெருவில் வசித்து வருபவர் சவுந்தர்யா. கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 132-வது வார்டில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும் அவர்களுடன் சவுந்தர்யாவின் அக்காள் மகன் ஒருவரும் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு, கணவரின் நண்பரான விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

நேற்று இரவு சவுந்தர்யாவின் வீட்டில் விஜய் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் சவுந்தர்யாவுக்கு பிரபு என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததும், இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரிந்தது. ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டியிட்டு உள்ளனர்.

இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விஜய்யை, காதலி சவுந்தர்யா தனது மற்றொரு கள்ளக்காதலன் பிரபுவுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சவுந்தர்யா, பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

சவுந்தர்யா ஏற்கனவே விஜய்யுடன் கள்ளக்காதலில் இருந்து வந்த நிலையில் தன்னுடன் வேலை பார்த்து வரும் பிரபு என்பவருடன் கடந்த ஒரு மாதமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விபரம் தெரிந்து ஆத்திரமடைந்த விஜய் சவுந்தர்யாவை கண்டித்தார். மேலும் "சவுந்தர்யாவுடன் பழகுவதை நிறுத்திக்கொள். இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன்" என்று வாட்ஸ்அப் மூலம் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்து வரும் விஜய்யை தீர்த்துக்கட்ட சவுந்தர்யாவும், பிரபுவும் சேர்ந்து திட்டமிட்டனர். அதன்படி நேற்று இரவு வீட்டில் மதுபோதையில் விஜய் இருந்தபோது பிரபுவும் வந்தார்.

அப்போது அவர்களுக்கிடையே சவுந்தர்யாவிடம் பழகுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அந்த நேரத்தில் பிரபு மற்றும் சவுந்தர்யா ஆகிய இருவரும் சேர்ந்து விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வெளியே சென்றது தெரியவந்தது.

கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News