உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை ஆசிரியர்கள் போராட்டம்: டிட்டோஜாக் உயர்மட்ட குழு

Published On 2024-09-09 07:48 GMT   |   Update On 2024-09-09 07:48 GMT
  • 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம்.
  • வருகிற 29, 30, அக்டோபர் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் முற்றுகை போராட்டம்.

சென்னை:

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) மாநில உயர்மட்டக் குழு உறுப்பி னர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர் மட்டக் குழுக் கூட்டம் 8-ந்தேதி காணொலி வழியே நடைபெற்றது.

கூட்டத்திற்கு டிட்டோ ஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான (பொறுப்பு) ஈ.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கே.பி. ரக்ஷித், வின்சென்ட் பால்ராஜ், மயில், தாஸ், சேகர், தியோடர் ராபின்சன், மன்றம் நா.சண்முகநாதன், வி.எஸ்.முத்துராமசாமி, கோ.காமராஜ், ஜெகநாதன், டி.ஆர்.ஜான் வெஸ்லி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (10-ந்தேதி) நடத்த உள்ள ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29-ந்தேதி, 30-ந்தேதி, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் தொடர் கோட்டை முற்றுகை போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பை 6-ந்தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோர் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை சுமூக மாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளி யிடபப்பட்டுள்ளது. அந்த செய்திக் குறிப்பை முழுமையாக ஆய்வு செய்த டிட்டோஜாக் மாநில உயர் மட்டக் குழு, டிட்டோஜாக் கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக்குறிப்பில் இடம் பெறாததால் திட்டமிட்டவாறு நாளை (10-ந்தேதி) அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும், வருகிற 29, 30, அடுத்த மாதம் 1-ந்தேதி ஆகிய 3 நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கும்படி கோரிக்கை வைத்தோம்.

பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைபடுத்துதல் அரசாணை 243-ஐ ரத்து செய்ய கேட்டிருந்தோம்.

இது உள்ளிட்ட பல கோரிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எதுவும் இல்லை. இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதால், தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமாக நாளை காலை 11 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்" என்றார்.

Tags:    

Similar News