உள்ளூர் செய்திகள் (District)

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை: அதிகாரிகள் ஆட்சி நடக்கிறது-டாக்டர் ராமதாஸ்

Published On 2024-09-26 07:37 GMT   |   Update On 2024-09-26 07:37 GMT
  • மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது.
  • ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே யுள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை சூழலுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

இவர் சிங்களர்களையும், தமிழர்களையும் இணைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கப்போவதில்லை.

ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார். அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர்.

இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு 1½ லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று எதுவும் செய்ய மாட்டார் என கூறினார்.

இந்தியா-இலங்கை உறவை வலுபடுத்த திசநாயக் இருப்பார் என்பது ஐயமாக தான் உள்ளது. சீன அரசுக்கு சாதகமாக திசநாயக் செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.

தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமி ழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும்.

தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது. மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது. மதுகடை திறப்பது, மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ள போது மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என கூறுவது ஏமாற்று வேலை.

மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி மத்திய அரசு தேசிய அளவில் கொள்கை உருவாக்க கூறுவது அபத்தமானது.

மது ஆலைகளை வைத்துள்ள தி.மு.க. மதுவிலக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபடாது. 2 ஆட்சி பணிகள் அதிகாரிகள் வீட்டில் 42 மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தியதற்கு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை அதிகாரிகள் ஆட்சி தான் நடைபெறுகிறது. ஆட்சி நிர்வாகம் முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை.

பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று தொடக்க கல்வி ஆசிரியர்களின் இயக்கங்கள் போராட்டம் செய்வதாக அறிவித்தனர்.

அதன் பின்னர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் கைவிட்ட ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

லோக் ஆயுக்தா வலுபடுத்தபட வேண்டும். ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மீது ஊழல் வழக்குகளை விசாரிக்க லோக் ஆயுக்தா வலிமையானதாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் உள்ளது போன்று தமிழகத்தில் வலிமையாக இல்லை.

முதல்வரை விசாரிக்கும் அதிகார லோக் ஆயுக்தாவிற்கு இல்லை என்பதால் லோக் ஆயுக்தா விசாரணை வரம்புக்குள் முதல்-அமைச்சரை விசாரிக்கும் அதிகாரத்தினை கொண்டு வர வேண்டும்.

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது குறித்து கூறுவதற்கு எதுவுமில்லை. மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட இலங்கை அதிபர் ஆட்சியில் இன்னும் மோசமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News