உள்ளூர் செய்திகள்

டிரைவரிடம் விசாரணை நடத்திய போலீசார்.

பெண் போலீஸ் மீது லாரியை மோத முயற்சித்த லாரி டிரைவர்-பரபரப்பு

Published On 2022-12-20 08:17 GMT   |   Update On 2022-12-20 08:17 GMT
  • போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது.
  • பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது.

பல்லடம் : 

பல்லடம் பகுதியில் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதால், பல்லடம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது. மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதித்தனர்.

ஆங்காங்கே விளம்பரப் பதாகைகள் வைத்து அறிவிப்பு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் பல்லடம் பச்சாபாளையம் பகுதியில், போக்குவரத்து போலீசார் வைத்துள்ள சாலை தடுப்பை மீறி லாரி ஓன்று பல்லடம் நகருக்குள் நுழைய முயற்சித்தது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் லாரியை தடுத்து நிறுத்தி, இந்த வழியாக செல்லக்கூடாது மாற்று பாதையில் செல்ல வேண்டும் என அறிவுறித்தினார். ஆனால்அந்த லாரி டிரைவர் அவர் மீது மோதுவது போல் லாரியை ஓட்டி நிற்காமல் சென்றுள்ளார்.

இதையடுத்து செல்போன் மூலம் அருகிலுள்ள நால்ரோடு பகுதியில் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்த போலீசாரிடம், அந்தப் பெண் போலீஸ், லாரி அத்துமீறி வருவதை கூறியுள்ளார். இதையடுத்து அந்த லாரியை போக்குவரத்து போலீஸ்காரர் மடக்கி, ஏன் மாற்றுப்பாதையில் செல்லாமல், பெண் போலீஸ் மீது மோதுவது போல் லாரியை ஓட்டினாய் எனக் கேட்டுள்ளார். இதற்கு அந்த டிரைவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை லாரியிலிருந்து இறங்கும்படி போலீஸ்காரர் அறிவுறுத்தியதாகவும், ஆனால் அந்த டிரைவர் இறங்க மறுத்ததாகவும், அவரது கையைப் பிடித்து போலீசார்இழுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை, அந்த வழியாக சென்ற பயணி ஒருவர் செல்போன் மூலம் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது பல்லடம் பகுதியில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News