உள்ளூர் செய்திகள்

குப்பையில் கொட்டப்படும் தக்காளிகள்... விவசாயிகள் வேதனை

Published On 2024-09-07 08:30 GMT   |   Update On 2024-09-07 08:30 GMT
  • உடுமலை, பழனி, கணியூர், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.
  • பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி செடிகளை பெருமளவில் பயிரிட்டு இருந்தனர். அங்கு தற்போது பழங்கள் நன்கு கனிந்து விளைச்சலுக்கு தயாராகி உள்ளது.

தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி அறுவடைப்பணிகள் தீவிரமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி காய்கறி சந்தைகளுக்கு தக்காளி வரத்து பெருமளவில் அதிகரித்து வருகிறது.

மேலும் உடுமலை, பழனி, கணியூர், குடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன.

பொள்ளாச்சி பகுதிகளில் கூடுதல் விளைச்சல் மற்றும் வெளியூர்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் தக்காளி விலை தற்போது மிகவும் குறைந்து காணப்படுகிறது.

மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி காய்கறி மார்க்கெட்டுகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்புவரை ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.12 முதல் அதிகபட்சமாக ரூ.15 வரையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் காய்கறி மார்க்கெட்டுகளில் பெட்டி-பெட்டியாக வந்திறங்கும் அதிகப்படியான தக்காளி வரத்தால் அங்கு தற்போது பழங்களின் விற்பனையில் தேக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் காய்கறி மார்க்கெட்டுகளில் விற்பனையாகாத தக்காளிகளை விவசாயிகளில் பலர் கால்நடைகளுக்கு உணவாக போட்டு செல்கின்றனர். எனவே காய்கறி மார்க்கெட் சாலையோர பகுதிகளில் தக்காளிப்பழங்கள் குவிந்து கிடக்கிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மார்க்கெட்டுகளில் தக்காளி விலை மிகவும் குறைவால் எங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் அழுகும் பொருட்கள் என்பதால் தக்காளிகளை குப்பையில் கொட்டிவிட்டு செல்கிறோம் என்று விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்து உள்ளனர். 

Tags:    

Similar News