- போலீசார் ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையொட்டி உள்ள ஜூஜூவாடி பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் போதைபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வெளிமாநிலத்தில் இருந்து மர்ம நபர்களால் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக-கர்நாடக எல்லை வழியாக வாகனங்களில் கடத்தி கொண்டு வரப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட எஸ்.பி., போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் ஓசூர் தமிழக-கர்நாடக எல்லையொட்டி உள்ள ஜூஜூவாடி பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் பெங்களூருவில் இருந்து கரூருக்கு 43 பேக்குகளில் சுமார் 196 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
இந்த காரை கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்ராஜ் (வயது28) என்பவர் ஓட்டி வந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள 196 கிலோ குட்கா பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.