கதம்பம்

காயில் பிறந்த பாடல்

Published On 2024-07-22 10:30 GMT   |   Update On 2024-07-22 10:30 GMT
  • எம்.எஸ்.வி ஆர்மோனியப் பெட்டியுடன் கிளம்பி நேரே வந்துவிடுகிறார்.
  • வீட்டு வாசலில் இருவர் உரக்க பேசும் சத்தம் கேட்க, என்னவென்று கேட்கிறார் கவிஞர்!

பலே பாண்டியா திரைப்படத்தில் 2 ஜோடிகள் பாடும் முதலிரவுப் பாடல் என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.யிடம் சிச்சுவேஷன் சொல்லப்படுகிறது! அப்போது மெட்டுக்குப் பாட்டெழுதும் வழக்கம் கிடையாது! கன்னல் தமிழில் கவியரசர் எழுத, அதை படித்த மறு நொடியே எம்.எஸ்.வி அருமையான மெட்டைப் பிடித்துவிடுவார்.

இந்தப் பாடலின் சவாலான விஷயம், இது முதலிரவுப் பாடல். விரசமாக இருக்கக் கூடாது ஆனால் காதல் பொங்கி வழிய வேண்டும்! மிக மிக மிக லேசாக காமமும் தெரியவேண்டும்! சிச்சுவேஷனைக் கேட்டதும் கவிஞர் 2 நாட்கள் டைம் கொடு என்றாராம்! 3 நாட்கள் கூட தருகிறேன் எழுதுங்க என எம்.எஸ்.வி சொல்லிவிட்டு கிளம்புகிறார்!

நான்கு நாட்கள் ஆகியும் கவிஞரிடம் இருந்து பதில் வரவில்லை! அவருக்கு போன் செய்த போது இன்னும் இரண்டு நாட்கள் டைம் கேட்கிறார்! எம்.எஸ்.வியும் சரி என்கிறார்! ஒரு வாரம் கடந்து விடுகிறது! மீண்டும் போன் செய்கிறார் எம்.எஸ்.வி. இப்பவும் கவிஞர் இல்ல விசு, இன்னும் நான் பாடல் எழுதலை என்கிறார் தர்ம சங்கடமாக!

எம்.எஸ்.வி ஆர்மோனியப் பெட்டியுடன் கிளம்பி நேரே வந்துவிடுகிறார்! 'கவிஞரே இன்னிக்கு உங்க கிட்ட பாட்டு வாங்காம கிளம்பறதில்ல' என்கிறார் உறுதியாக!

இல்ல விசு, முதலிரவு சூழலில் காமமும் காதலும் இல்லாமல் ஓரிரு வரிகள் எழுதலாம். மொத்தப் பாட்டும் எப்படி எழுத? எனக்கு காதல் ரசம் தான் பொங்குது என்கிறார்!

அதெல்லாம் இல்ல கவிஞரே, உம்மால் முடியும்! நீர் எவ்வளவு பெரிய கவிஞர். இந்தச் சூழலுக்கு எழுதுவதா உங்களுக்கு கஷ்டம்! என்று உசுப்பிவிட, கவிஞரும் சரிப்பா யோசிக்கிறேன் என்கிறார்!

அவரது சிந்தனையில் காதல் தான் பெருகுகிறது! அப்போது வீட்டு வாசலில் இருவர் உரக்க பேசும் சத்தம் கேட்க, என்னவென்று கேட்கிறார் கவிஞர்!

போய் பார்த்துவிட்டு வந்த அவரது உதவியாளர், "அய்யா நம்ம வீட்டு சமையற்காரர் தான் வாசலில் பழம் விக்கிறவர் கிட்ட என்னப்பா பழம் கொண்டுவான்னா.. காயா கொண்டுவந்திருக்கே! எல்லாமே தானா பழுத்த காய் மாதிரி இல்லியேன்னு சண்டை போடுறார்" இந்த வார்த்தையைக் கேட்டதும் கவிஞரது உள்ளம் துள்ளி குதிக்கிறது!

ஆஹா காய் - பழம் இதை எப்படி மறந்தேன்! தமிழ் இலக்கணத்தில் கூட தேமாங்காய், புளிமாங்காய் இருக்கிறதே! அதை எண்ணாத 'மாங்காய்' மடையன் போல இருந்துவிட்டேனே என்று சரசரவென பாடல் வரிகளில் காய்களாக கொண்டுவந்து குவிக்கிறார்! அப்படி எழுதிய பாடலே இந்த அத்திக்காய் பாடல் என்பது நம்மில் எத்னி பேருக்குத் தெரியும்…

"அத்திக்காய் காய்காய்

ஆலங்காய் வெண்ணிலவே

இத்திக்காய் காயாதே

என்னுயிரும் நீயல்லவோ

கன்னிக்காய் ஆசைக்காய்

காதல்கொண்ட பாவைக்காய்

அங்கேகாய் அவரைக்காய்

மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்

என்னுளங்காய் ஆகுமோ

என்னை நீ காயாதே

என்னுயிரும் நீயல்லவோ.."

-வெங்கடேஷ் ஆறுமுகம்

Tags:    

Similar News