கதம்பம்

அப்படி சொல்லாதீர்கள்..!

Published On 2024-09-19 09:15 GMT   |   Update On 2024-09-19 09:16 GMT
  • பால் கறக்க மிகுந்த அனுபவம் அவசியம்.
  • படிப்பதை விட ஆடு மாடு மேய்ப்பது தான் சவாலான காரியம்‌.!!

படிக்கலனா ஆடு மாடு தான் மேய்க்கனும் னு பொதுவாக பலர் சொல்ல கேட்டிருப்போம்..!

அதற்கு காரணம் படிப்பு ஏதோ உயரிய ஞானம் போலவும், ஆடு மாடு மேய்த்தல் ஏதோ எளிமையான வேலை போலவும் நினைக்கும் நினைப்பு தான் ..!

உண்மை என்னனு கொஞ்சம் பார்ப்போமா?

ஆடு மாடு மேய்ப்பவனை கல்வி கற்பித்து கல்விமானாக ஆக்கி விட முடியும். அதற்கு உதாரணம் நம் முந்தைய தலைமுறை. நம் தாத்தாக்கள் பெரும்பாலும் ஆடு மாடு மேய்த்தவர்கள் தான். ஆனால் நம் அப்பாக்கள் பெரும்பாலும் 10 வகுப்பாவது முடித்தவர்களாக தான் இருக்கிறார்கள்.

கல்வி கற்க கொஞ்சம் நேரம் ஒதுக்கி மெனக்கெட்டால் போதும்.... இன்று படிக்கலாம் நாளை ஓய்வெடுக்கலாம்.. ஒரு பாடம் பிடிக்கவில்லை என்றால் இன்னொரு பாடம் படிக்கலாம்.

ஆனால் ஆடு மாடு வளர்க்க தினம் உழைக்க வேண்டும், முடியும் முடியாது என்ற வாய்ப்புலாம் கிடையாது... தினமும் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய வேண்டும், அது சலித்தாலும் திரும்ப திரும்ப செய்ய வேண்டும்....

இவை எல்லாவற்றையும் தாண்டி , ஆடு மாடுகளோடு ஒரு ஆத்மார்த்தமான இணைப்பு அவசியம், அவற்றை பார்த்த மாத்திரத்தில் அவற்றின் தேவை , பிரச்சனை, நோய் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் அனுபவம் அவசியம், நம்மை விட 4 மடங்கு பெரிய உயிரான மாட்டை கட்டுப்படுத்த நமக்கு 4 அடி கயிறு போதும், ஆனால் அதை லாவகமாக கட்டுப்படுத்த தெரிய வேண்டும், எல்லாவற்றையும் தாண்டி, பால் கறப்பது மிகப்பெரிய சவால். அதிக மாடுகள் இருந்தால் இயந்திரம் மூலம் கறக்கலாம், ஒன்று இரண்டு மாடு இருக்கும் பட்சத்தில் கையால் கறப்பது தான் லாபகரமானது. பால் கறக்க மிகுந்த அனுபவம் அவசியம். அனுபவம் இல்லாமல் மாட்டின் குணம் அறியாமல் பால் கறக்க முயன்றால் வாயில் சில பற்களை இழக்க நேரிடும். சில நேரங்களில் குழந்தை பேறு கூட இல்லாமல் போகும். இவ்வளவு கஷ்டம் இருக்கு ஆடு மாடு வளர்ப்பில் ....

அதனால் இனி ஒழுங்கா படிக்கலனா ஆடு மாடு தான் மேய்க்கனும்னு யாரும் சொல்லாதீங்க. படிப்பதை விட ஆடு மாடு மேய்ப்பது தான் சவாலான காரியம்.!!

-அருள்குமார்

Tags:    

Similar News