இந்தியா

நேரு, இந்திராகாந்திக்கு பிறகு 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

Published On 2024-08-13 04:48 GMT   |   Update On 2024-08-13 04:48 GMT
  • பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
  • இந்திராகாந்தி 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.

புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகி உள்ளார்.

இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். மோடி தற்போது நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்திக்குபிறகு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை வருகிற 15-ந்தேதி பெற உள்ளார்.

முன்னாள் பிரதமர் நேரு 17 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இந்திரா காந்தி 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரையிலும் பிறகு 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். இவர் 16 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ளார். இதில் அவர் 11 முறை தொடர்ச்சி யாக உரையாற்றியுள்ளார்.


பிரதமர் மோடி கடந்த ஆண்டு, 10 முறை சுதந்திர தின உரையாற்றிய மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.

பிரதமர் மோடி சுதந்திர தின முதல் உரையை கடந்த 2014-ல் ஆற்றினார். அப்போது, தூய்மை இந்தியா திட்டம், ஜன்தன் வங்கிக் கணக்கு போன்ற புதிய திட்டங்களை அறிவித்தார். அப்போது முதல் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை சுதந்திர தின உரையில் வெளியிட்டு வருகிறார்.

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் 82 நிமிடங்களாகும். இது மற்ற பிரதமர்களை காட்டிலும் அதிகமாகும்.

முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் இதற்கு சற்று நெருக்கமாக உரையாற்றி உள்ளார். 1997-ல் குஜ்ராலின் ஒரே ஒரு சுதந்திர தின உரை 71 நிமிடங்கள் நீடித்தது.


பிரதமர் மோடியின் உரைகள் 2017-ல் மிகக் குறுகிய நேரமான 55 நிமிடங்களில் இருந்து 2016-ல் மிக நீண்ட நேரமான 94 நிமிடங்கள் வரை வேறுபடுகின்றன.

அரசு ஆவணங்களின்படி, சுதந்திர தின உரைகளின் சராசரி நேரம் காலப்போக்கில் அதிகரித்தது. 1947-ல்நேரு ஆற்றிய முதல் உரை 24 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. பிரதமர் மோடி பதவியேற்பதற்கு முன், 1972-ல் இந்திரா காந்தி ஆற்றிய உரையே நீளமானது. இது 54 நிமிடங்கள் நீடித்தது.

Tags:    

Similar News