இந்தியா (National)
null

சிறுநீரக மோசடி - மருத்துவமனை நிர்வாகம் மீது ஆட்டோ டிரைவர் புகார்

Published On 2024-07-10 05:57 GMT   |   Update On 2024-07-10 06:07 GMT
  • கடன் வாங்கிய பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

ஆந்திரா மாநிலம், குண்டூர் கே.வி.பி காலனியை சேர்ந்தவர் மது பாபு ஆட்டோ டிரைவர். இவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆன்லைனில் சூதாட்டம் விளையாடுவதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பல லட்சங்களை கடனாக வாங்கினார்.

கடன் வாங்கிய பணம் முழுவதையும் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்தனர்.

இந்த நிலையில் பேஸ்புக் ஒன்றில் சிறுநீரகத்தை தானம் செய்தால் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என பதிவிடப்பட்டு இருந்தது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த விஜயவாடாவை சேர்ந்த பாஷா என்ற நபரை மது பாபு செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பாஷா தானும் சிறுநீரகம் தானம் செய்து ரூ.30 லட்சம் பெற்றதாக தெரிவித்தார்.

தனது கடனை அடைக்கவும், குடும்ப வருமையை ஒழிக்கவும் சிறுநீரகத்தை தானமாக வழங்க மது பாபு ஒப்புக்கொண்டார். அதன்படி கடந்த மாதம் 15-ந் தேதி விஜயவாடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு மதுபாபுவின் ஆதார் அட்டை, பிற அடையாள அட்டைகளில் அவரது விலாசத்தை மாற்றி நோயாளியின் உறவினராக மாற்றி சிறுநீரகத்தை தானமாக வழங்கியதாக எழுதிக் வாங்கிக் கொண்டனர்.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் மது பாபுவின் சிறுநீரகம் அகற்றப்பட்டு வேறு ஒருவருக்கு பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பாஷா ரூ.50 ஆயிரத்தை மட்டும் கொடுத்தார். மீதி பணத்தை கேட்ட போது உனது நண்பருக்கு உடல் உறுப்பு தானம் செய்ததாக கையெழுத்து போட்டு இருக்கிறாய். அதனால் மீதி பணத்தை தர முடியாது என மதுபாபுவை பாஷா மிரட்டி அனுப்பினார்.

தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த மதுபாபு இது குறித்து குண்டூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். அதில் ஆஸ்பத்திரி நிர்வாகம் பல பேரிடம் சிறுநீரகம் பெற்று மோசடி செய்து வருவதாகவும், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News