இந்தியா

'அமலுக்கு வந்தது புல்டோசர் சட்டங்கள்.. 146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து நிறைவேற்றியது' - கார்கே

Published On 2024-07-01 05:38 GMT   |   Update On 2024-07-01 05:38 GMT
  • காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.
  • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார்.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.

 

அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது, 'மக்களவைத் தேர்தல் முடிவுகளால் மன ரீதியாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் அரசியலமைப்பை மதிப்பது போல் தற்போது நாடகமாடத்  தொடங்கியுள்ளனர்.

ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் பாராளுமன்றதில் 146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதே ஆகும். எனவே இந்தியா கூட்டணி இந்த புல்டோசர் சட்டங்களை பாராளுமன்றத்தில் பொறுத்துக் கொண்டிருக்காது' என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசை எதிரித்து அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் எதிர்கட்சிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான எம்.பிக்கள் அவையில் இல்லாமலே புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தும் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News