வீடியோவிற்காக செல்போன் டவரில் ஏறிய 'யூ-டியூபர்'
- நீலேஸ்வர்22 என்ற பெயரில் ‘யூ-டியூபர்’ சேனல் நடத்தி வரும் நீலேஸ்வர் 8 லட்சத்து 87 ஆயிரம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார்.
- சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமார் 5 மணிநேரம் போராடி நீலேஸ்வரை பத்திரமாக மீட்டனர்.
சமூக வலைதள புகழுக்காக இளைஞர்கள் செய்யும் சில சாகசங்கள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் 'யூ-டியூபர்' ஒருவர் ரீல்ஸ் வீடியோவிற்காக செல்போன் டவரில் ஏறிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.
நீலேஸ்வர்22 என்ற பெயரில் 'யூ-டியூபர்' சேனல் நடத்தி வரும் நீலேஸ்வர் 8 லட்சத்து 87 ஆயிரம் சந்தாதாரர்களை பெற்றுள்ளார். இந்நிலையில் சந்தாதாரர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சாகசம் செய்ய திட்டமிட்ட அவர், தனது நண்பருடன் அப்பகுதியில் உள்ள செல்போன் டவர் அருகே சென்றார். பின்னர் அந்த டவரில் நீலேஸ்வர் ஏறியதை அவரது நண்பர் வீடியோ எடுத்துள்ளார்.
இவர்களின் ஆபத்தான செயலை பார்த்த அப்பகுதி பொது மக்கள் அங்கு திரண்டனர். உடனே நீலேஸ்வரின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் நீலேஸ்வர் செல்போன் டவரில் சிக்கிக் கொண்டார். உடனே பொது மக்கள் போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுமார் 5 மணிநேரம் போராடி நீலேஸ்வரை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் புகழ் பெறுவதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.