இந்தியா

பிரிட்டன் பிரதமராகும் கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2024-07-05 09:32 GMT   |   Update On 2024-07-05 09:52 GMT
  • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 408 இடங்களில் வெற்றி பெற்றது.
  • தொழிலாளர் கட்சி 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

புதுடெல்லி:

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மொத்தமுள்ள 650 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 326 இடங்களையும் தாண்டி 408 இடங்களில் வெற்றி பெற்று, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

தற்போது வெற்றி பெற்றுள்ள தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ள கெய்ர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கெய்ர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் இந்தியா-இங்கிலாந்து விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த தங்களின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும், தேர்தலில் தோல்வி அடைந்த கன்சர்வேடிவ் கட்சி தலைவருக்கு விடுத்துள்ள செய்தியில், இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்கும், உங்கள் பதவிக்காலத்தில் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதில் உங்களின் தீவிர பங்களிப்புக்கும் நன்றி ரிஷி சுனக். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News