இந்தியா

புற்றுநோய் அறிகுறி: கர்நாடகாவில் பானிபூரியை தடை செய்ய நடவடிக்கை

Published On 2024-07-03 04:08 GMT   |   Update On 2024-07-03 04:08 GMT
  • நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
  • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக சுகாதாரத்துறை சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல உணவகங்களில் இருந்து சுமார் 250 பானி பூரி மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதியானது.

மேலும் இந்த ஆய்வில் நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.

கோபி மஞ்சூரியன் மற்றும் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News