இந்தியா

முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது: பா.ஜ.க.வை சாடிய ராகுல் காந்தி

Published On 2024-09-04 10:47 GMT   |   Update On 2024-09-04 10:47 GMT
  • ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18-ம் தேதி முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
  • அனந்தநாக் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசத்தை மாநிலமாக மாற்றும்போது அல்லது மாநிலத்தைப் பிரிக்கும்போது ஜனநாயகத்தை ஆழமாக்குகிறோம்.

உரிமைகளை இன்னும் ஆழமாக முன்னோக்கி எடுத்துச் செல்கிறோம்.

ஆனால், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றும்போது உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஜம்மு காஷ்மீர் மூலம் உங்களுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மீட்டெடுப்பது காங்கிரஸ் கட்சி அல்லது தேசிய மாநாட்டு அல்லது இந்தியா கூட்டணிக்கு மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.

பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் உங்களிடம் எதையும் சொல்லலாம்.

நாங்கள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை வழங்கப் போகிறோம் என்பதைச் சொல்லவே நான் இங்கு வந்துள்ளேன்.

தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என நாங்கள் விரும்பினோம், ஆனால் பா.ஜ.க. இதை விரும்பவில்லை.

அவர்கள் முதலில் தேர்தலை விரும்பினர். நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் உங்களுக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News