இந்தியா

பண மோசடி வழக்கில் ரூ.14 கோடி மதிப்புள்ள விமானம் பறிமுதல்- அமலாக்கத்துறை அதிரடி

Published On 2025-03-09 08:03 IST   |   Update On 2025-03-09 08:03:00 IST
  • தலைமை நிர்வாக அதிகாரியான அமர் தீப் குமார் மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.
  • இந்த விமானம் முதலீட்டு மோசடியின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது.

ஐதராபாத்:

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.850 கோடி வரை சுருட்டியதாக புகார் எழுந்தது.

இந்த பண மோசடி தொடர்பாக அந்த நிறுவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான அமர் தீப் குமார் மற்றும் சிலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியது.

இந்த வழக்கில் தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இயக்குனரை கைது செய்துள்ள அமலாக்கத்துறை தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே அமர் தீப் குமார் தனது நிறுவனத்துக்கு சொந்தமான சிறிய விமானத்தில் கடந்த ஜனவரி மாதம் நாட்டைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமர் தீப் குமார் நாட்டை விட்டு வெளியேற பயன்படுத்தப்பட்ட விமானம் ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விமானத்தை சோதனையிட்டனர். அதில், 8 பேர் அமரக்கூடிய அந்த விமானம் 1.6 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.14 கோடி) கொடுத்து கடந்த ஆண்டு வாங்கப்பட்டது தெரியவந்தது.

இந்த விமானம் முதலீட்டு மோசடியின் மூலம் கிடைத்த பணத்தில் வாங்கப்பட்டதாக அமலாக்கத்துறை நம்புகிறது. எனவே அந்த விமானத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News