கோலாகலமாக நிறைவடைந்த மகா கும்பமேளா: 66 கோடி பக்தர்கள் புனித நீராடினர்
- மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.
- அடுத்த மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது.
உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா தற்போது உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்தது. பிரயாக்ராஜ் கும்பமேளா ரூ.2,100 கோடியும், உத்தர பிரதேச மாநில அரசு ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்து பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இதற்காக ஒர் இடைக்கால நகரமே உருவாக்கப்பட்டது.
கடந்த 45 நாட்களாக எந்தவித பெரிய அசம்பாவிதம் இன்றி மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் அதிகாலை முதலே திரிவேணி சங்கமத்துக்கு சாதுக்களும், பல்தர்களும் அலை அலையாக வந்தனர்.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறுகையில், கும்பமேளாவில் புனித நீராடுவோர் எண்ணிக்கை 45 கோடி எட்டும் என எண்ணியிருந்த நிலையில், 66 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டுதான் நடைபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.