இந்தியா

பிரதமர் மோடி காப்பி அடிக்கிறார்-ராகுல்காந்தி கிண்டல்

Published On 2024-05-18 05:44 GMT   |   Update On 2024-05-18 05:52 GMT
  • நான் பேசுவதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார்.
  • ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசார கூட்டத்தில் சோனியாவுடன் பங்கேற்ற ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது:-

தேர்தல் பிரசாரங்களில் நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி பிரதிபலிக்கிறார். தொழில் அதிபர்கள் அதானி, அம்பானி பெயரை மோடியால் சொல்லாமல் இருக்க முடியாது என்று நான் சமீபத்தில் பேசினேன்.

2 நாட்கள் கழித்து அதானி, அம்பானி பற்றி மோடி பேசினார். நான் என்னவெல்லாம் பேசுகிறேனோ அதை அப்படியே பிரதமர் மோடி காப்பி அடித்து பேசுகிறார்.

இதில் என்ன தெரிகிறது? என்னால் அவரை எந்த விசயத்திலும், எப்படியும் பேச வைக்க முடியும்.

நீங்களும் பிரதமர் மோடி ஏதாவது சொல்ல வேண்டும் என்று விரும்பினால் அதை நீங்கள் என்னிடம் சொல்லுங்கள். நான் பிரசார மேடைகளில் பேசுகிறேன். அதை அடுத்த நாளே பிரதமர் மோடி எடுத்து பேசுவார்.

மோடி பிரசாரங்களில் இப்போது இதுதான் நடக்கிறது. புதிதாக அவர்கள் எதுவும் சொல்வது இல்லை.

இன்று இங்கு பேசிய எனது தாயார் ரேபரேலி தொகுதியை என்வசம் ஒப்படைத்து இருப்பதாக தெரிவித்தார். அவரது இந்த பேச்சு என் வாழ்க்கையில் மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும்.

பாரம்பரியமிக்க ரேபரேலி தொகுதியை மிகவும் நம்பிக்கையுடன் என் கையில் ஒப்படைத்து இருக்கிறார்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். பெருமையுடன் நான் இதை சொல்கிறேன். எனது தாயின் ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் மதிப்பு கொடுப்பேன் என்பதை இந்த நேரத்தில் வாக்குறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டு மக்களுக்காக உழைக்க 20 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த இந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை ஏமாற்ற மாட்டேன்.

இவ்வாறு ராகுல் பேசினார்.

Tags:    

Similar News