இந்தியா

எமர்ஜென்சி குறிப்பை தவிர்த்திருக்கலாம்: ஓம் பிர்லாவிடம் கூறிய ராகுல் காந்தி

Published On 2024-06-27 12:07 GMT   |   Update On 2024-06-27 12:07 GMT
  • பதவி ஏற்றதும் எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து ஓம் பிர்லா பேசினார்.
  • இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்தனர். அப்போது, சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் எம்ர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது தங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிவித்ததாக காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேசி வேணுகோபால் கூறியதாவது:-

சபாநாயகர் ஓம் பிர்லா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. ராகுல் காந்திதான் எதிர்க்கட்சி தலைவர் என்று சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதன்பின் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று ராகுல் காந்தி ஓம் பிர்லாவை சந்தித்தார்.

நாடாளுமன்ற செயல்பாடு பற்றி பல விசயங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, ஓம் பிர்லாவிடம், எமர்ஜென்சி விவகாரம் குறித்து பேசினார். அப்போது சபாநாயகர் குறிப்பில் இருந்து அதை தவிர்த்திருக்கலாம். அது அரசியல் தொடர்பான குறிப்பு என்பது தெளிவாக தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவ்வாறு கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

மேலும், தனியாக வேணுகோபால் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுத்தியுள்ளார். அதில் "பதவி ஏற்ற நிலையில் உங்கள் இருக்கையில் இருந்து சுமார் 50 வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற எமர்ஜென்சி தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து பேசியது அதிர்ச்சி அளித்தது. தலைவர் பதவியில் இருந்து இப்படி ஒரு அரசியல் குறிப்பை வெளியிடுவது நாடாளுமன்ற வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News