பதவியேற்பு உறுதி மொழியில் இனி முழக்கங்கள் கூடாது: விதியில் மாற்றம் கொண்டு வந்தார் சபாநாயகர்
- பல எம்.பி.க்கள் பாரத் மா கி ஜே என கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.
- ஓவைசி பதவி ஏற்றபின் ஜெய் பாலஸ்தீனம் என கோஷமிட்டார்.
தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் மக்களவை உறுப்பினராக ஒரு வாரத்திற்கு முன் பாராளுமன்றத்தில் பதவி ஏற்றுக் கொண்டனர். பதவி ஏற்பின்போது உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள். உறுதி மொழி எடுத்த பின் ஜெய் ஹிந்த், ஜெய் அரசமைப்பு போன்று கோஷம் எழுப்பினர். திமுக எம்.பி.க்கள் பலர் கருணாநிதி வாழ்க, பெரியார் வாழ்க, முக ஸ்டாலின் வாழ்க, உதயநிதி ஸ்டாலின் வாழ்க என முழக்கமிட்டனர்.
ஹைதராபாத் தொகுதி ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. அசாதுதீன் ஓவைசி உருது மொழியில் பதவியேற்று கடைசியில் 'ஜெய் பாலஸ்தீனம்' என கோஷமிட்டார். எம்.பி.க்கள் பலர் பாரத் மதா கி ஜே என கோஷமிட்டபடி உறுதி மொழி ஏற்றனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். உறுதி மொழி ஏற்பு விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் இனி எம்.பி.க்கள் பதவியேற்பு உறுதி மொழியின்போது எந்த கோஷங்களையும் எழுப்பக்கூடாது. நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக்கூடாது. உறுதி மொழிக்கான படிவத்தின் முன்பாகவும், பின்பாகவும் எந்த வார்த்தைகளையும் சேர்க்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.