இந்தியா (National)

யோகி ஆதித்யநாத் ஹிட்லர் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்: அசாதுதீன் ஒவைசி கடும் தாக்கு

Published On 2024-07-18 15:59 GMT   |   Update On 2024-07-18 15:59 GMT
  • முசாபர்நகர் காவல்துறையின் இந்த உத்தரவு தீண்டாமையை ஊக்குவிப்பதாகும்.
  • நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் பாடுபடுகிறீர்களா?

உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

அதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஐதராபாத் தொகுதி எம்.பி.யான அசாதுதீன் ஒவைசி "முசாபர்நகர் காவல்துறையின் இந்த உத்தரவு தீண்டாமையை ஊக்குவிப்பதாகும். உத்தர பிரதேச மாநில முதல்வரான யோகி ஆதித்யநாத் ஹிட்லரின் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அரசிலமைப்பின் 17 பிரிவின் தீண்டாமை தடையை மீறுவதாக அமையும். இந்த உத்தரவுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். பெயர் மற்றும் மதத்தை காண்பிக்க சொல்லும் இந்த உத்தரவு சட்டப்பிரிவு 21 (வாழ்வதற்கான உரிமை), சட்டப்பிரிவு 19 (வாழ்வாதார உரிமை) ஆகியவற்றை மீறுவதாகும். இதனால் ஏராளமான முஸ்லிம் பணியாளர்கள் வேலையை இழந்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் மெக்டொனால்டு, கேஎஃப்சி, பிசா ஹட் உள்ளன. அவற்றிற்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அவர்களுடன் நீங்கள் (அரசு) ஏதாவது ஏற்பாடு செய்துள்ளீர்களா?. இந்த உத்தரவு உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹிட்லின் ஆன்மாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

"நீங்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக மட்டும் பாடுபடுகிறீர்களா? அரசியலமைப்பின் பொருத்தம் எங்கே? அரசியலமைப்புச் சட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டீர்களா? நரேந்திர மோடி அரசியலமைப்பை எடுத்து முத்தமிடுவதைப் பார்க்கிறோம், இது எல்லாம் கேலிக்கூத்து மற்றும் நாடகம்" என்றார்.

Tags:    

Similar News