ஐசிசி டிராபி வறட்சிக்கு இந்த வருடம் தென்ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைக்கும்: ஸ்மித்
- கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் டி20 அணி இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்தன.
- இந்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் உள்ளன.
கிரிக்கெட்டில் தலைசிறந்த அணிகளில் ஒன்று தென்ஆப்பிரிக்கா. உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்டிருந்த, கொண்டிருக்கும் அந்த அணியால் இதுவரை ஐசிசி டிராபியை வெல்ல முடியவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில் இந்த வருடம் ஐசிசி டிராபி வறட்சியை தென்ஆப்பிரிக்கா முடிவுக்கு கொண்டு வரும் என தென்ஆப்பிரிக்காவின் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனுமான கிரோம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கிரேம் ஸ்மித் கூறியதாவது:-
2027 உலகக் கோப்பைக்கு முன்னதாகவே, ஐசிசி சாம்பியன் டிராபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூலமாக ஐசிசி டிராபிக்காக காத்திருப்பதை முடிவுக்கு கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 2027 உலகக் கோப்பையை சொந்த மக்கள் முன் வென்றால், அது அற்புதமானதாக இருக்கும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் எங்கள் மைதானங்கள், ஆடுகளங்கள் மற்றும் கிரிக்கெட் சுற்றுச்சூழல் அமைப்பை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்ய விரும்புகிறோம். இதனால் 2027 உலகக் கோப்பையை நடத்தும் நேரத்தில், அதை வெல்ல வாய்ப்புள்ள அணியாக இருப்போம்.
இவ்வாறு கிரோம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வருகிற 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. 2027 உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்கா நடத்துகிறது.
கடந்த ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும், இந்த வருட தொடக்கத்தில் பெண்களுக்கு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.